Wednesday, December 02, 2009

பழகு மொழி - 13

தலையாய 'பகுதி'யும் 'விகுதி' உடல் உறுப்புகளும்

(2) 2. இருவகைப் பதங்கள்

காரணம் ஏதுமின்றி, வாழையடி வாழையாகத் தமிழில் வழங்கிவரும் சொற்களை, "இடுகுறிச் சொற்கள்" என்பர். இடுகுறிச் சொற்களைப் பிரித்துப் பொருள் சொல்ல இயலாது. அவை முழுமையாக நின்றே பொருள் தருபவையாகும். இவ்வாறான இடுகுறிச் சொற்களைப் "பகாப் பதம்" எனக் கூறுவர். பகாப் பதங்கள் குறைந்த எழுத்துகளைப் பெற்றிருக்கும்.

குறைந்த எழுத்துகளைப் பெற்றிருந்தாலும் வயிறு, முக்காலி, நாற்காலி, காற்றாடி போன்ற காரணப் பெயர்கள் பகாப் பதங்களாகா.

(2) 2.1. பகாப் பதங்கள்

பெயர், வினை, இடை, உரி எனப் பகாப் பதங்கள் நான்கு வகைப்படும்:

பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி
முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற
பெயர்வினை இடைஉரி நான்கும் பகாப்பதம்
-நன்னூல் 131.

(2) 2.1.1. பெயர்ப் பகாப் பதம்

பெயர்ப் பகாப் பதங்கள் பெயர்ச் சொற்களாக வரும்.

காட்டுகள் : மண், மழை, நிலா, பலா.

(2) 2.1.2. வினைப் பகாப் பதம்

வினைப் பகாப் பதங்கள் பெரும்பாலும் ஏவல் வினைகளாக வரும்.

காட்டுகள் : எழு, நில், நட, செய்.

(2) 2.1.3. இடைப் பகாப் பதம்

பெயர்ச் சொல், வினைச் சொல் தவிர்த்து, இடைச் சொற்களாக வருபவை இடைப் பகாப் பதங்களாகும்.

காட்டுகள் : மற்று (மற்ற), ஆதல், போல், தான், உம், முன், பின், இனி, ஏ, ஓ போன்றவையும் வேற்றுமை உருபுகளான ஐ, ஆல், கு, ன், அது, கண் ஆகியனவும் இடைப் பகாப் பதங்களாகும்.

(2) 2.1.4. உரிப் பகாப் பதம்

பெரும்பாலும் 'மிக்க' எனும் ஒரு சொற்பொருளைப் பல சொற்களாகப் பயன்படுத்த உதவும் உரிச் சொற்கள், உரிப் பகாப் பதங்களாகும்.

காட்டுகள்: சால, உறு, தவ, நனி, கூர், கழி.

இவற்றுள் 'சால' எனும் உரி, சொல்லின் முன்னும் பின்னும் முறையே, பகுதி ("சாலச் சிறந்தது") ஆகவும் தொகை ("அன்புசால் நண்பர்களே!") ஆகவும் இடம் பெறும்.

இவை தவிர, சேர்ந்து வரும் சொற்களைப் பொருத்து, வேறுபட்ட பொருள்களைத் தரத்தக்க, 'கடி' எனும் ஓர் உரிச் சொல்லும் உண்டு: கடிமணம் = புதுமையான திருமணம்; கடிவேல் = கூர்மையான வேல்; கடிமுரசு = ஆர்க்கும் முரசு; கடிவந்தான் = விரைந்து வந்தான். 'கடி' உரி, பகுதியாக வரும்.

மேற்காணும் காட்டுகளில் குறிப்பிட்டுள்ள பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரிக்க முடியாது; பிரித்தால் அவை பொருள் தரா.

பகுக்கத் தக்க ஒரு பெயர்/வினைச் சொல் எத்துணை நீளமானதாக இருந்தாலும் அதன் பகாப் பதமே அச்சொல்லின் தலையாய பகுதி ஆகும். தத்தம் பகாப் பதங்களே பகுதி யாகும் - நன்னூல் 134.

காட்டு : வா+த்+த்+அன்+அன் = "வந்தனன்" எனும் வினைச் சொல்லின் தலையாய் உள்ள "வா" எனும் வினையடிதான் இச்சொல்லின் பகுதியாகும். (எடுத்துக் காட்டில் எழுத்துப்பிழை ஏதுமில்லை). வெகு அரிதாக இடை/உரிச் சொற்கள் பகுதியாக அமைவதுண்டு. அவை பற்றி அடுத்து வரும் பாடங்களில் படிக்கலாம்.


சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ... தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

Sunday, November 08, 2009

பழகு மொழி - 12

பழகுவோம்(2) சொல்லியல்
சொல் எனப் படுவது யாதெனில், ஓரெழுத்தாக இருந்தாலும் பல எழுத்துகளாகச் சேர்ந்தாலும் தமிழில் பொருள் தருமானால் அது "சொல்" என வழங்கப் படும். சொல்லை வடமொழியில் "பதம்" எனக் குறிக்கின்றனர். பதம் எனும் வடசொல், தமிழ் இலக்கண நூல்களில் வெகுஇயல்பாக ஆளப் பட்டுள்ளது.

எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருள்தரிற் பதமாம் அதுபகாப் பதம்பகு பதமென இருபா லாகி யியலு மென்ப - நன்னூல் 128.

(2) 1 ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள்:

தமிழில் ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள் நாற்பதுக்கும் அதிகமுண்டு எனக் கூறுவர். அவற்றுள் பல வழக்கொழிந்து போயின. நாம் தெரிந்து கொள்ளத் தக்க ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள் சிலவற்றை இங்குக் காண்போம். "ஓரெழுத்து ஒருமொழி அனைத்தும் நெடிலாக அமையும்; குறிலோசை எழுத்துகள் ஓரெழுத்து ஒருமொழியாக வாரா" என்பது தொல்காப்பியரின் துணிபு : நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி; குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே - தொல்காப்பியம் - மொழிமரபு 10,11.

ஆனால், நாம் பாடம் (1):1:1:3இல் படித்த அகச்சுட்டு எழுத்துகளான அ,இ,உ ஆகிய மூன்றும் வினா எழுத்தான 'எ'வும் குறில்களே. தனிச் சொல் எனும் தகுதி பெறாமல் இடைச் சொல் வகையைச் சேர்ந்திருப்பதால் அவை ஒதுக்கப் பட்டன போலும். எனினும், தனிச் சொல்லாகவே அமையும் இரு குறில் எழுத்துகளும் உள:

(2) 1:1 ஓரெழுத்து ஒருமொழிச் சொல் - குறில்:

து = சாப்பிடு எனும் பொருள் தரும் ஏவல் வினை
நொ = வருந்து (ஏவல்)
+சொல் = அச்சொல்(சுட்டு)
+பாடம் = இப்பாடம்(சுட்டு)
+பக்கம் = உப்பக்கம்(பின் பக்கம் - சுட்டு)
+நூல் = எந்நூல்? (வினா)

மேற்காணும் ஓரெழுத்து அகச்சுட்டு/வினா ஒருமொழியின் புறச்சுட்டுச் சொற்கள்: அந்த, இந்த, உந்த, எந்த ஆகியனவாகும்.

(2) 1:2 ஓரெழுத்து ஒருமொழிச் சொல் - நெடில்:

= பசு
= பறக்கும் பூச்சி; =வழங்கு (ஏவல் வினை)
= ஊன்/இறைச்சி
= அம்பு (கருவி)
= ஐந்து (எண்: ஐ+பால்=ஐம்பால்)
= மதகில்/அணையில் நீரைத் தடுத்து வைக்கப் போடும் பலகை
கா = காத்தல் (வினை); கா=தோட்டம்/சோலை: பூ+கா = பூங்கா (பெயர்)
கை = கரம் (சினை/உறுப்பு)
கோ = மன்னன்
கௌ = கவ்வு (ஏவல்)
சா = சாவு
சீ = அழி/விலகு/நீங்கு (ஏவல்)
சே = செம்மை (பண்பு)
தா = கொடு (ஏவல்)
தீ = நெருப்பு
தை = தை(காலம்); தை = தையல் செய் (ஏவல்)
நா = நாக்கு
நீ = நீ (முன்னிலைச் சுட்டு)
பா = பாடல்
பூ = மலர்; பூ = பூமி/உலகு
போ = செல் (ஏவல்)
பை = கைப்பை/பணப்பை
மா = மாம்பழம்; மா = பெரிய (பண்பு)
மீ = மேல்
மை = மசி
வா = அழைப்பு (ஏவல்)
வை = வை (ஏவல்)
வௌ = திருடு (ஏவல்)

மீக்கூறிய 28 ஓரெழுத்து ஒருமொழிச் சொற்களுள் கை, சீ, தா, தீ, தை, நீ, பூ, போ, பை, மை, வா, வை ஆகியன நாம் உரைநடைப் பேச்சிலும் எழுத்திலும் இயல்பாகப் பயன்படுத்துபவை. மற்றவை பா எழுதுவதற்குப் பயன் படுவனவாகும்.

இனி, இன்னொன்றும் வழக்கில் வரக்கூடும்: "ஆடி மாதம் ஆற்றில் வெள்ளம் வந்தால் ''ப் போடு!"

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

Tuesday, October 13, 2009

பழகு மொழி - 11

இலக்கணப் போலி என்றும் எழுத்துப் போலி என்றும் போலிகள் இருவகைப்படும்.

இப்போது எழுத்தியலை நாம் பயின்று கொண்டிருப்பதால் எழுத்துப் போலிகளை அறிந்து கொள்வோம்.

ஒரு சொல்லில் உள்ள ஓர் எழுத்தை மாற்றி எழுதினாலும் பொருள் வேறுபடாமல் அமைந்தால் அவ்வெழுத்து, போலி எனப்படும். போல வருவது போலி என்றானது.

இயல்பான சில எழுத்துகளுக்குப் பகரமாகப் போலி எழுத்துகள் இடம் பெறுவது வழக்கில் உள்ளது என்பதையும் அவ்வாறு எழுதுதல் குற்றமில்லை என்பதையும் தெரிந்து கொள்வதற்குப் போலிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

(1):11 எழுத்துப் போலிகள்

எழுத்துப் போலிகள் மூவகைப் படும்.

(1):11:1 முதற்போலி

ஒரு சொல்லின் இயல்பான முதலெழுத்துக்குப் பகரமாய், வேறு எழுத்துகள் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது முதற்போலி எனப்படும்.

(1):11:1:1 'ஐ'காராத்துக்குப் பகரமாய், 'அய்' எனும் இரு எழுத்துகள் போலிகளாக எழுதப் படும். காட்டுகள் :யா=அய்யா; ஐயன்மீர்=அய்யன்மீர்

(1):11:1:2 ''காரத்துக்குப் பகரமாய், 'அவ்' எனும் இரு எழுத்துகள் போலிகளாக எழுதப் படும். காட்டுகள் : வையார் = அவ்வையார்; டதம் = அவ்டதம்

(1):11:1:3 'ந'கரத்துக்கு 'ஞ'கரம் போலியாக எழுதப் படும். காட்டுகள் : யம்பட = யம்பட; நாயிறு=ஞாயிறு

(1):11:2 இடைப்போலி

ஒரு சொல்லுக்கு இடையில் இயல்பான எழுத்தை விடுத்து வேறு எழுத்தைப் போட்டு எழுதுவது இடைப்போலி எனப்படும்.

'அ'கரத்துக்கு 'ஐ'காரம் போலியாக எழுதப் படும்.

காட்டுகள் :யன் = அரையன்; பமை = பழைமை; இமை = இளைமை

(1):11:3 கடைப்போலி

ஒரு சொல்லின் கடைசியில் உள்ள இயல்பான எழுத்துக்குப் பகரமாய் வேறோர் எழுத்து இடம் பெறுவது கடைப்போலி எனப்படும்.

(1):11:3:1 மகர ஒற்றுக்கு னகர ஒற்று, போலியாக வரும்.

காட்டுகள் : அறம்=அறன்; திறம்=திறன் (அறன் அறிந்து வெஃகா அறிவுடையோர்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு - குறள்) நயம்=நயன் (நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன் இல சொல்லாமை நன்று - குறள்) குலம்=குலன் (இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன் உடையான் கண்ணே உள - குறள்) நலம் = நலன்; கலம்=கலன்; நிலம்=நிலன்

(1):11:3:2 லகர ஒற்றுக்கு ரகர ஒற்று, போலியாக வரும்.

காட்டுகள் : குடல்=குடர்; சுவல்=சுவர்; பந்தல்=பந்தர்; சாம்பல்=சாம்பர்

(1):11:3:3 லகர ஒற்றுக்கு ளகர ஒற்றும் போலியாக வரும்.

காட்டுகள் : மதில்=மதிள்; செதில்=செதிள்.

எழுத்தியல் இத்துடன் நிறைவடைகிறது.

சொல்லியலைத் தொடங்குவோம், இன்ஷா அல்லாஹ்.

Monday, September 28, 2009

பழகு மொழி - 10


தமிழ் + சொல் = தமிழ் சொல் என்று எழுதுவது சரியா?

தமிழ் + ச் + சொல் = தமிழ்ச் சொல் என 'ச்' எனும் மெய்யைச் சேர்த்து எழுதுவது சரியா? போன்ற (மெய்)மயக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அடுத்து வரவிருக்கும் சொல்லியல் பாடத்தில் 'வலிமிகுதல்', 'வலிமிகா இடங்கள்' ஆகிய இரண்டு பகுதிகளில் அவற்றை விரிவாகப் படிக்க இருக்கிறோம். இன்றைய பாடம் எழுத்து வகை மெய் மயக்கமாகும்.


(1):10 மெய் மயக்கம்

"அக்கம், அன்பு ஆகிய இரு சொற்களில் எத்தன மெய்கள் உள்ளன?" என ஒரு வினாவை எழுப்பினால், "முதல் சொல்லான அக்கம் இரு மெய்களையும் இரண்டாவது சொல்லான அன்பு, ஒரு மெய்யையும் கொண்டிருக்கின்றன" என்றே விடை சொல்வோம். ஆனால், இந்தப் பாடத்தைப் பொருத்த மட்டில் அந்த விடை தவறானதாம்.


(1):10:1 உடனிலை மெய் மயக்கம்

அக்கம் எனும் சொல், அ+க்+க்+அ+ம் எனப் பிரியும். எனவே, ('அ' எனும்) ஓர் உயிர், ('க்' எனும்) ஒரு தனிமெய், (க்+அ='க' எனும்) ஓர் உயிர் மெய், ('ம்' எனும்) ஒரு தனிமெய் ஆகியன அக்கம் எனும் சொல்லில் அடங்கி இருக்கின்றன.

ஒரு சொல்லுக்குள் ஒரு (க்) தனிமெய்யும் அதையடுத்து (க் எனும்) அதே மெய், (அ எனும்) உயிர் கலந்து (க்+அ=க என்று) இரட்டித்து வருவதை, "உடனிலை மெய் மயக்கம்" எனக் கூறுவர்.

கீழ்க்காணும் காட்டுகள் பாடம் (1):8இல் கொடுக்கப் பட்டன:

பாக்கம் (பா+க்+க்+அ+ம்), அச்சம் (அ+ச்+ச்+அ+ம்), வாட்டம் (வா+ட்+ட்+அ+ம்), இங்ஙனம் (இ+ங்+ங்+அ+ன்+அ+ம்), அஞ்ஞானம் (அ+ஞ்+ஞ்+ஆ+ன்+அ+ம்), கண்ணன் (க+ண்+ண்+அ+ன்), பொய்யாமொழி (பொ+ய்+ய்+ஆ+ம்+ஒ+ழ்+இ).


(1):10:2 வேற்றுநிலை மெய் மயக்கம்

'அன்பு' (அ+ன்+ப்+உ) எனும் சொல்லில் ('அ' எனும்) ஓர் உயிரும் ('ன்' எனும்) ஒரு தனிமெய்யும் ('பு' எனும்) ஓர் உயிர் மெய்யும் உள்ளன. இவ்வாறு ஒரு தனிமெய்யை அடுத்து அதே மெய்யல்லாத வேறொரு மெய்(ப்), உயிர்(உ) கலந்து(பு) வருவதை. "வேற்றுநிலை மெய் மயக்கம்" எனக் கூறுவர்.

(1):10:3 இரு தனிமெய் எழுத்துகள்

உரைநடையில், தன்னை அடுத்து இன்னொரு தனிமெய்யை ஏற்றுக் கொள்ளும் தனிமெய்கள் ய்,ர்,ழ் ஆகிய மூன்றாகும். "ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற" - தொல்காப்பியம், எழுத்தியல் 15. (செய்யுள்களில் ஒற்றளபெடை எனும் விதிவிலக்கு உண்டு).

காட்டுகள்:

ய் : வாய்க்கால், பாய்ச்சல், காய்த்தல், வாய்ப்பு

ர் : பார்க்க, உணர்ச்சி, பெயர்த்து, ஈர்ப்பு

ழ் : வாழ்க்கை, மகிழ்ச்சி, வாழ்த்து, காழ்ப்பு


(1):10:4 ஏற்பன, மறுப்பன, சேர்ப்பன

ஒரு சொல்லுக்குள் 'ச'கர மெய்(யான ச்)ஐ அடுத்து 'ச'கர வரிசை (உயிர்) மெய் மட்டுமே இடம் பெறும். தன்னை ஒட்டி வேறு எந்த (உயிர்) மெய்யையும் சகர மெய் ஏற்காது.

காட்டுகள்:
ச்சை, கச்சு, இச்சை, தச்சு, குச்சி.

க,த,ப ஆகிய வல்லின மெய்களுள் எதுவும் தன்னை ஒட்டி, தன் இன (உயிர்) மெய்யைத் தவிர பிற இரண்டின் (உயிர்) மெய்களை ஏற்பதில்லை. அவ்வாறு ஏற்பவை தமிழ்ச் சொற்களாகா என்பதறிக.

காட்டுகள்:
க்தி, சப்தம், சமத்காரம் ஆகியன வடமொழிச் சொற்களாகும்.

வல்லின மெய்களை ஒட்டி வல்லினமே அல்லாது மெல்லின, இடையின (உயிர்) மெய் எழுத்துகள் இடம் பெற்றிருந்தால் அவை வடமொழிச் சொற்களாகவே இருக்கும்.

காட்டுகள்:
நாகரத்னம் (மெல்லினம்), சாத்வீகம் (இடையினம்), வியாக்யானம் (இடையினம்) ஆகியன வடமொழிச் சொற்களாகும்.

இதனாற்றான், மேற்காணும் வடமொழிச் சொற்களோடு தமிழ்ச் சொல் இலக்கணத்துக்கு ஏற்ப முறையே நாகரத்தினம், சாத்துவீகம், வியாக்கியானம் என அச்சொல்லுக்குள் உள்ள மெய்யெழுத்து, இரட்டித்து உயிர் கலந்து எழுதப் படுகிறது.

வடசொற் கிளவிவடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே - தொல்காப்பியம், எச்சவியல் 5.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில்

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

Friday, September 11, 2009

பழகு மொழி - 09


(1):6 சொல்லின் முதலில் இடம்பெறா எழுத்துகள்:

(1):6:1 புள்ளியுடைய மெய்யெழுத்து எதுவும் சொல்லின் முதலாவதாக வராது.

(1):6:2 டகர, றகர, ஙகர, ணகர, னகர, லகர, ளகர, ழகர, வரிசைகளில் எந்த எழுத்தும் தமிழ்ச் சொல்லுக்கு முதலில் வாரா.

(1):6:3 யகர வரிசையில் யி, யீ, யெ, யே, யை, யொ ஆகிய ஆறு எழுத்துகளும் தமிழ்ச் சொல்லின் முதலில் வாரா.

(1):6:4 வகர வரிசையில் வு, வூ, வொ, வோ ஆகிய நான்கு எழுத்துகளும் தமிழ்ச் சொல்லின் முதலில் வாரா.

(1):7 சொல்லுக்குள் இடையில் வராத எழுத்துகள்:

(1):7:1 ஒரு சொல்லின் இடையில் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 தனித்த உயிரெழுத்துகளும் உரைநடையில் இடம்பெறா. (செய்யுளில் விதிவிலக்கு உண்டு).

(1):7:2 ட், ற் என்னும் இரு எழுத்துகளை அடுத்து எந்த மெய்யும் இடம் பெறாது.

காட்ச்சி, மாட்ச்சி, அதற்க்கு, இதற்க்கு என எழுதுவது பிழையாகும்.

(1):8 சொல்லுக்குள் மெய் இரட்டித்து வராத எழுத்துகள்:

பாடம் (1):2:2இல் கூறப்பட்டிருக்கும் (க்+க்+உ=)க்கு, (ச்+ச்+உ=)ச்சு, (ட்+ட்+உ=)ட்டு ஆகியன ஒரு சொல்லின் இறுதியில் அமையாமல், இடையில் அமைந்திருந்தால் அவற்றை, "உடனிலை மெய் மயக்கம்" எனக் கூறுவர்.

காட்டுகள்:

பாக்கம் (பா+க்+க்+அ+ம்), அச்சம் (அ+ச்+ச்+அ+ம்), வாட்டம் (வா+ட்+ட்+அ+ம்), இங்ஙனம் (இ+ங்+ங்+அ+ன்+அ+ம்), அஞ்ஞானம் (அ+ஞ்+ஞ்+ஆ+ன்+அ+ம்), கண்ணன் (க+ண்+ண்+அ+ன்), பொய்யாமொழி (பொ+ய்+ய்+ஆ+ம்+ஒ+ழ்+இ).

இவ்வாறு மெய் இரட்டித்து வருதல், உடனிலை மெய் மயக்கம் ஆகும்.

ர், ழ் ஆகிய இரு எழுத்துகள் உரைநடையில் மெய் இரட்டித்து வாரா. (செய்யுளில் விதிவிலக்கு உண்டு). "மெய்ம்மயக்கு உடனிலை ர ழ ஒழித்து ஈர் எட்டு ஆகும் ..." - நன்னூல் 110.


(1):9 சொல்லின் இறுதியில் வராத எழுத்துகள்:

(1):9:1 ஆ, ஈ போன்ற ஓரெழுத்து ஒரு மொழியானது, ஒரு கடைசிச் சொல்லாக (கன்றுக்குப் பால் தரும் [பசு]; பறந்து போனது ) அன்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளைக் கொண்ட ஒரு சொல்லின் இறுதியில் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 தனித்த உயிரெழுத்துகளும் உரைநடையில் இடம்பெறா. (செய்யுளில் விதிவிலக்கு உண்டு).

(1):9:2 க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு வல்லின மெய்யெழுத்துகளும் சொல்லுக்கு இறுதியில் வாரா.

கால்+சிலம்பு என்பதை காற் சிலம்பு என்று பிரித்து எழுதாமல் காற்சிலம்பு எனச் சேர்த்து எழுத வேண்டும்.

(1):9:3 ங், ஞ், ந் ஆகிய மூன்று மெல்லின எழுத்துகள் சொல்லின் இறுதியில் வாரா (பண்டைய இலக்கியத்தில் அரிதாக இடம் பெற்ற ஞ், ந் ஆகிய இரு எழுத்துகளும் இப்போது வழக்கொழிந்து விட்டன).

மூன்று+நூறு என்பதை முந் நூறு என்று பிரித்து எழுதாமல் முந்நூறு எனச் சேர்த்து எழுத வேண்டும்.

(1)9:4 இடையினத்தில் வ் மட்டும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.

அந்த+வாசல் என்பதை அவ் வாசல் என்று பிரித்து எழுதாமல் அவ்வாசல் எனச் சேர்த்து எழுத வேண்டும்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

-தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

Friday, September 04, 2009

பழகு மொழி - 08

படிக்கப் போறோம்
(1):5 சொல்லின் முதலில் இடம்பெறும் எழுத்துகள் (அல்லது) வருக்கம்:

(1):5:1 உயிர் வருக்கம்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 உயிரெழுத்துகளும் சொல்லின் முதலில் வருக்கமாக வரும்.

ஆத்திச்சூடியிலிருந்து காட்டுகள்:

றஞ்செய விரும்பு, றுவது சினம், யல்வது கரவேல், வது விலக்கேல், டையது விளம்பேல், க்கமது கைவிடேல், ண்ணெழுத் திகழேல், ற்ப திகழ்ச்சி, ய மிட்டுண், ப்புர வொழுகு, துவ தொழியேல், ஒளவியம் பேசேல்.

(1):5:2 உயிர்மெய் வருக்கம்

க, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ ஆகிய எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரும்.

ண்டொன்று சொல்லேல், னி நீராடு, ந்தைதாய்ப் பேண், ன்றி மறவேல், ருவத்தே பயிர்செய், ண்பறித் துண்ணேல், ஞ்சகம் பேசேல்.

"எல்லாரிடமும் இணங்கி, நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்க" என்று அறிவுரை கூறுமுகமாய், "ப்போல் வளை" என்பதாக ஆத்திச்சூடியில் வருகிறது. எனினும், இக்கால எழுத்து வழக்கில் 'ங' வருக்கமாய் வருவதில்லை; ஆனால், காட்டுகளாகப் பயன்படுவதுண்டு: "ஞண நமன எனும்புள்ளி முன்னர்" (- தொல்காப்பியம் - எழுத்து 25); "ஞண நமன வயலள ஆய்தம்" (- யாப்பருங்கல விருத்தி).

ஞகர வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ, ஆகியன மட்டும் சொல்லுக்கு முதலில் வரும். ஞகரத்துக்குக் காட்டாக, "யம்பட உரை" என்று ஆத்திச்சூடியில் வருகிறது. "நயம்பட உரை" என்பதன் முதற்போலியாக அங்கு 'ஞ' பயன் படுத்தப் பட்டுள்ளது. எனினும் "மலி" (நாய்) எனும் நல்ல தமிழ்ச் சொல், 'ஞ'வில் தொடங்குவது ஈண்டு நோக்கத் தக்கது. மேலும், ஞாலம்=உலகம், ஞெகிழி=கொள்ளிக்கட்டை, ஞொள்கல்=இளைத்தல் ஆகிய அரிய சொற்களும் தமிழில் உள.

யகர வரிசையில் ய, யா ஆகிய இரு எழுத்துகள் தமிழ்ப் பெயர்ச் சொற்களின் முதற்போலியாகவும் யு, யூ, யோ, யௌ ஆகிய எழுத்துகள் வடமொழிச் சொற்களுக்காகவும் சொல்லின் முதலில் வருவதுண்டு:

எமன்=மன், ஆனை=யானை. இவையன்றி, யாங்கனம் (எவ்வாறு) யாது (எது) என வினா எழுத்தாகவும் யாகாரம் பயன்படுத்தப் படுவதுண்டு. யகர வரிசை வருக்கத்தில் வடமொழிச் சொற்களான யுகம், யூகம், யோகம், யௌவனம் ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளவையாம்.

வகர வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை ஆகிய எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்:

ரிசை, வாஞ்சை, விறகு, வீடு, வெண்ணெய், வேடன், வைகறை.

(1):5:2:1 ககர வருக்கம்

டிவது மற, காப்பது விரதம், கிழமைப்பட வாழ், கீழ்மை யகற்று, குணமது கைவிடேல், கூடிப் பிரியேல், கெடுப்ப தொழி, கேள்வி முயல், கைவினை கரவேல், கொள்ளை விரும்பேல், கோதாட் டொழி, கெளவை அகற்று.

(1):5:2:2 சகர வருக்கம்

க்கர நெறி நில், சான்றோ ரினத்திரு, சித்திரம் பேசேல், சீர்மை மறவேல், சுளிக்கச் சொல்லேல், சூது விரும்பேல், செய்வன திருந்தச்செய், சேரிடம் அறிந்து சேர், சையெனத் திரியேல், சொற்சோர்வு படேல், சோம்பித் திரியேல்.

குறிப்பு:

ச்+அ=; ச்+ஐ=சை; ச்+ஔ=சௌ ஆகிய மூன்றும் தமிழ்ச் சொல்லின் முதலில் இடம் பெறா என்பதாகத் தொல்காப்பியம் கூறுகிறது:

சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அ ஐ ஔ என்னும் மூன்றலங் கடையே
(தொல் - எழுத்து 29).

ஆனால், அம்மூன்றில் சகரத்தில் தொடங்கும் தமிழ்ச் சொற்கள் நிறைய உள. காட்டாக: ங்கு,ட்டை, ட்டம், ருகு, ரடு, த்தம் (கூலி) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மேலும் இலக்கண வகைகளுள் 'ந்தி' எனும் பெயரில் ஓர் இலக்கணம் இருப்பதும் ஈண்டு நோக்கத் தக்கது. அஃது, இரு சொற்கள் சந்திக்கும்போது ஏற்படும் மாறுதல்களைக் குறிப்பதாகும். அதைப் "புணரியல்" என்றும் கூறுவர்.

(1):5:2:3 தகர வருக்கம்

க்கோ னெனத்திரி, தானமது விரும்பு, திருமாலுக் கடிமைசெய், தீவினை யகற்று, துன்பத்திற் கிடங்கொடேல், தூக்கி வினைசெய், தெய்வ மிகழேல், தேசத்தோ டொத்துவாழ், தையல்சொல் கேளேல், தொன்மை மறவேல், தோற்பன தொடரேல்.

(1):5:2:4 நகர வருக்கம்

ன்மை கடைப்பிடி, நாடொப்பன செய், நிலையிற் பிரியேல், நீர்விளை யாடேல், நுண்மை நுகரேல், நூல்பல கல், நெற்பயிர் விளை, நேர்பட வொழுகு, நைவினை நணுகேல், நொய்ய வுரையேல், நோய்க்கிடங் கொடேல்.

(1):5:2:5 பகர வருக்கம்

ழிப்பன பகரேல், பாம்பொடு பழகேல், பிழைபடச் சொல்லேல், பீடு பெறநில், புகழ்ந்தாரைப் போற்றிவாழ், பூமி திருத்தியுண், பெரியாரைத் துணைக்கொள், பேதைமை யகற்று, பையலோ டிணங்கேல், பொருடனைப் போற்றி வாழ், போர்த்தொழில் புரியேல்.

(1):5:2:6 மகர வருக்கம்

னந்தடு மாறேல், மாற்றானுக் கிடங்கொடேல், மிகைபடச் சொல்லேல், மீதூண் விரும்பேல், முனைமுகத்து நில்லேல், மூர்க்கரோ டிணங்கேல், மெல்லினல்லாள் தோள்சேர், மேன்மக்கள் சொற்கேள், மைவிழியார் மனையகல், மொழிவ தறமொழி, மோகத்தை முனி.

(1):5:2:7 வகர வருக்கம்

ல்லமை பேசேல், வாது முற்கூறேல், வித்தை விரும்பு, வீடு பெறநில், வெட்டெனப் பேசேல், வேண்டி வினைசெயேல், வைகறைத் துயிலெழு.

(1):5:2:8 பிறமொழிச் சொற்களுக்கு

பிறமொழிச் சொற்களுக்காக டகரம், ரகரம், லகரம் ஆகியன சொல்லின் முதல் எழுத்தாகப் பயன் படுவதுண்டு:

ச்சு, கசியம், ஞ்சம் போன்றவற்றை அப்படியே எழுதுவதில் தவறில்லை. இடச்சு, இரகசியம், இலஞ்சம் என இகரம் சேர்த்து எழுத வேண்டுவதில்லை.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

-தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

Thursday, August 27, 2009

பழகு மொழி - 07

(1):4 முற்றியலுகரம் (ஒரு மாத்திரை)
முற்றியலுகரத்தைச் சரியாக ஒலிப்பதற்கு இதழ்கள் இரண்டையும் குவிக்கும் முயற்சி தேவை.

(1):4:1 ஓரெழுத்து முற்றியலுகரம்

'உ' என்ற தனித்த உயிரெழுத்தும் காட்டுகளாக ஆளப்படும்

கு, சு, டு, து, பு, று

ஙு, ஞு, ணு, நு, மு, னு

யு, ரு, லு, வு, ழு, ளு

ஆகிய தனித்த உகர உயிர்மெய் அனைத்தும் முற்றியலுகரமாகும்.

(1):4:2 ஈரெழுத்து முற்றியலுகரம்

ஒரு சொல் இரண்டு எழுத்துகளில் அமைந்து, முதல் எழுத்து, குறிலாகவும் இரண்டாவது (இறுதி) எழுத்து

கு, சு, டு, து, பு, று

ணு, மு, னு

யு, ரு, லு, வு, ழு, ளு

ஆகிய எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் முற்றியலுகரமாகும்.


குறிப்பு:

ஙு, ஞு, நு, ஆகிய மூன்றும் சொல்லின் இறுதியில் வாரா.


காட்டுகள்:

கு, பசு, படு, இது, அபு, உறு

ணு, கிமு, மனு

யு, ஒரு, வலு, கவு, வழு, பளு


(1):4:3 மூன்று+ எழுத்து முற்றியலுகரம்

ஒரு சொல் மூன்று எழுத்துகளுடனோ மேற்பட்டோ அமைந்து, அதன் இறுதி எழுத்து

ணு, மு, னு

யு, ரு, லு, வு, ழு, ளு

ஆகிய எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் முற்றியலுகரமாகும்.


குறிப்பு:

ஙு, ஞு, நு, ஆகிய மூன்றும் சொல்லின் இறுதியில் வாரா.


காட்டுகள்:

பண்ணு, பரமு, பவுனு

சரயு, தனியொரு, அதிவலு, தழுவு, ஈரேழு, தெள்ளு


சத்தியமார்க்கம்.காம் தளத்தில்

-தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

Saturday, August 22, 2009

பழகு மொழி - 06

(1):3 குற்றியலிகரம் (அரை மாத்திரை)

குற்றியல் உகரத்தைப் போன்றே குற்றியலிகரமும் குறுகி ஒலிப்பதாகும். உரைநடையில் வழக்கொழிந்து போனவற்றுள் குற்றியலிகரமும் ஒன்றாகும். குற்றியலிகரம் என்பது தன்னியக்கமின்றி, யகர வருமொழியைச் சார்ந்து திரியும் ஓசை என்பதாலும் தமிழில் யகர வரிசையில் தொடங்கும் சொற்கள் மிகக் குறைவு என்பதாலும் அஃது அரிதாகிப் போனது.

கவிதை புனையும் கவிஞர்கள் ஓசையழகுக்காகக் குற்றியலிகரத்தைப் பயன் படுத்துவர். முன்மொழியின் இறுதி எழுத்து வல்லின உகரக் குறிலாக (கு, சு, டு, து, பு, று) அமைந்து வருமொழியானது 'ய'கரத்தில் தொடங்கும்போது முன்மொழியின் இறுதி எழுத்தான வல்லின உகரக் குறில், இகரமாகத் திரியும். அவ்வாறு திரியும்போது அதன் ஓசை குன்றி ஒலிக்கும். திரிந்தும் குன்றியும் ஒலிக்கும் இகரமே குற்றியலிகரமாகும்.

காட்டுகள் :

வீடு+யாது = வீடியாது;
காட்டு+யானை = காட்டியானை;
எழுத்து+யகரம் = எழுத்தியகரம்.

"குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
மழலைச் சொற் கேளாதவர்"
எனும் (
மக்கட்பேறு-66) குறளில், "குழல் இனிது" எனும் உகர ஈற்றை, "குழல் இனிதி" என்று குற்றியல் இகரமாக மாற்றிது, வருமொழிச் சொல்லான "யாழினிது"வில் உள்ள 'யா' ஆகும்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில்

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

Tuesday, August 11, 2009

பழகு மொழி - 05

(1):2 குற்றியல் உகரம் (அரை மாத்திரை)

கடந்த பாடம் (1):1:3:1()இல் நாம் படித்த உகர வல்லின உயிர் மெய்க் குறில் எழுத்துகளுள் ஏதேனும் ஒன்று ஒரு சொல்லின் ஈற்றாய் (கடைசி எழுத்தாக) அமைந்து, அச்சொல், கீழ்க்காணும் ஆறு வகைச் சொற்களுள் ஒன்றாக இருப்பின் அது குற்றியல் உகரம் எனப்படும்.ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகர வல்லின உயிர் மெய்க் குறில் எழுத்துகள் சிலவேளை அதன் இயல்புத் தன்மையான ஒரு மாத்திரை அளவிலிருந்து குன்றி, அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். அதையே குற்றியல் உகரம் என்பர்.

குற்றியல் உகரத்தின் எழுத்துகள் 6: கு,சு,டு,து,பு,று (உகர வல்லின உயிர் மெய்க் குறில்கள்)

குற்றியல் உகர வகைகள் 6.

(1):2:1 நெடில் தொடர்க் குற்றியல் உகரம்:

இஃது இரண்டெழுத்துகளை மட்டும் கொண்டது. முதல் எழுத்து நெடிலாகவும் இரண்டாவதான இறுதி எழுத்து உகர வல்லின உயிர் மெய்க் குறில்களுள் ஒன்றாகவும் அமையும்.

காட்டுகள் : வாகு, காசு, மாடு, யாது, கோபு, று

(1):2:2 வன்தொடர்க் குற்றியல் உகரம்:

வன்தொடர்க் குற்றியல் உகரம் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். சொல்லின் ஈற்றில் (இறுதியில்) இடம் பெறும் உகர வல்லின உயிர் மெய்க் குறில் (கு,சு,டு,து,பு,று) எழுத்துக்கு இடப்புறம் அமைந்த (ஈற்றயல்) எழுத்து, ஈற்றெழுத்தின் மெய் (புள்ளி/ஒற்று) எழுத்தாக அமைந்திருக்கும்.

காட்டுகள் : சுக்கு, ச்சு, ட்டு, த்து, காப்பு, மாற்று

ஒரு சொல்லின் இறுதி ஈரெழுத்துகள் (க்+க்+உ=)க்கு, (ச்+ச்+உ=)ச்சு, (ட்+ட்+உ=)ட்டு, (த்+த்+உ=)த்து, (ப்+ப்+உ=)ப்பு, (ற்+ற்+உ=)ற்று ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றாக அமைந்திருந்தால் அச்சொல்லின் இறுதியில் அமைந்த எழுத்து, வன்தொடர்க் குற்றியல் உகரம் என்று எளிதாக இனங் கண்டு கொள்லலாம்.

(1):2:3 மென்தொடர்க் குற்றியல் உகரம்:

மென்தொடர்க் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். ஈற்றயலில் மெல்லின மெய்யெழுத்தைப் பெற்றிருப்பதால் மென்தொடர்க் குற்றியல் உகரம் என்றானது.

காட்டுகள் : நுங்கு, கழஞ்சு, ண்டு, சிந்து, கொம்பு, ன்று

ஒரு சொல்லின் இறுதி ஈரெழுத்துகள் ங்கு, ஞ்சு, ண்டு, ந்து, ம்பு, ன்று முதலியவற்றுள் ஏதேனும் ஒன்றாக அமைந்திருந்தால் அச்சொல்லின் இறுதியில் அமைந்த எழுத்து, மென்தொடர்க் குற்றியல் உகரம் என்று இனங் கண்டு கொள்க.

(1):2:4 இடைத் தொடர்க் குற்றியல் உகரம்:

இடைத் தொடர்க் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். ஈற்றயலில் இடையின மெய்யெழுத்தைப் பெற்றிருக்கும்.

காட்டுகள் : பெய்து, சார்பு, சால்பு, போழ்து

(1):2:5 ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரம்:

ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். ஈற்றயலில் ஆய்த எழுத்தைப் பெற்றிருக்கும்.

காட்டுகள் : கு, சு, து

குற்றியல் உகரப் பாடத்தில் இதுவரை நாம் பயின்றவை:

முதலாவதாக, ஓர் உயிர்மெய் நெடில் எழுத்தையும் ஓர் உயிர்மெய் வல்லின உகரக் குறில் எழுத்தையும் கொண்ட நெடில் தொடர்க் குற்றியல் உகரம்.

அடுத்த மூன்று பாடங்களில் (இறுதி எழுத்துக்கு இடப்புறம் அமைந்திருக்கும்) ஈற்றயலில் ஒற்று(புள்ளி எழுத்து) உடன் அமைந்த வன்/மென்/இடைத் தொடர்க் குற்றியல் உகரங்கள்.

ஐந்தாவதாக ஆய்த எழுத்தை ஈற்றயலாகக் கொண்ட ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரம்.

ஆறாவதாக நாம் பயில இருப்பது உயிர்த் தொடர்க் குற்றியல் உகரமாகும்.

(1):2:6 உயிர்(மெய்)த் தொடர்க் குற்றியல் உகரம்:

இந்தக் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். இதன் ஈற்றயல் உயிர்மெய் எழுத்தாக இருந்த போதிலும் இஃது, உயிர்த் தொடர்க் குற்றியல் உகரம் என்றே வழங்கப் படுகிறது.

காட்டுகள் : விறகு, அரசு, கசடு, எனது, மரபு, வயிறு

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

Friday, August 07, 2009

பழகு மொழி - 04

(1):1:3 உயிர் மெய்யெழுத்துகள்


ஒரு மெய்யெழுத்தும் ஓர் உயிரெழுத்தும் சேர்ந்தது, உயிர் மெய்யெழுத்தாகும்
காட்டு: க்+அ = க(குறில்); க்+ஆ = கா(நெடில்).

(1):1:3:1(அ) உயிர்மெய் வல்லினக் குறில்கள் :

க்+=

ச்+=

ட்+=

த்+=

ப்+=

ற்+=


,,,,, : அகர வல்லினக் குறில்கள் 6



க்+=கி

ச்+=சி

ட்+=டி

த்+=தி

ப்+=பி

ற்+=றி

கி,சி,டி,தி,பி,றி : இகர வல்லினக் குறில்கள் 6


க்+=கு

ச்+=சு

ட்+=டு

த்+=து

ப்+=பு

ற்+=று

கு,சு,டு,து,பு,று : உகர வல்லினக் குறில்கள் 6


க்+=கெ

ச்+=செ

ட்+=டெ

த்+=தெ

ப்+=பெ

ற்+=றெ

கெ,செ,டெ,தெ,பெ,றெ : எகர வல்லினக் குறில்கள் 6


க்+=கொ

ச்+=சொ

ட்+=டொ

த்+=தொ

ப்+=பொ

ற்+=றொ

கொ,சொ,டொ,தொ,பொ,றொ : ஒகர வல்லினக் குறில்கள் 6


(1):1:3:1() உயிர்மெய் வல்லின நெடில்கள்:

க்+=கா

ச்+=சா

ட்+=டா

த்+=தா

ப்+=பா

ற்+=றா

கா,சா,டா,தா,பா,றா : ஆகார வல்லின நெடில்கள் 6


க்+=கீ

ச்+=சீ

ட்+=டீ

த்+=தீ

ப்+=பீ

ற்+=றீ

கீ,சீ,டீ,தீ,பீ,றீ : ஈகார வல்லின நெடில்கள் 6


க்+=கூ

ச்+=சூ

ட்+=டூ

த்+=தூ

ப்+=பூ

ற்+=றூ

கூ,சூ,டூ,தூ,பூ,றூ : ஊகார வல்லின நெடில்கள் 6


க்+=கே

ச்+=சே

ட்+=டே

த்+=தே

ப்+=பே

ற்+=றே

கே,சே,டே,தே,பே,றே : ஏகார வல்லின நெடில்கள் 6


க்+=கோ

ச்+=சோ

ட்+=டோ

த்+=தோ

ப்+=போ

ற்+=றோ

கோ,சோ,டோ,தோ,போ,றோ : ஓகார வல்லின நெடில்கள் 6


(1):1:3:1() உயிர்மெய் வல்லினக் குறுக்கம்:

க்+=கை

ச்+=சை

ட்+=டை

த்+=தை

ப்+=பை

ற்+=றை

கை,சை,டை,தை,பை,றை : ஐகார வல்லினக் குறுக்கம் 6


க்+=கௌ

ச்+=சௌ

ட்+=டௌ

த்+=தௌ

ப்+=பௌ

ற்+=றௌ

கௌ,சௌ,டௌ,தௌ,பௌ,றௌ : ஔகார வல்லினக் குறுக்கம் 6


குறிப்பு:
கௌரி என்பது ஔகாரம் சேர்ந்த (வடமொழிச்) சொல்லாகும். அதை, "கெ ரி" என்று படிக்காமல் "கவ்ரி" என்பதுபோல் படிக்க வேண்டும்.

(1):1:3:2(
) உயிர்மெய் மெல்லினக் குறில்கள்:

ங்+=

ஞ்+=

ண்+=

ந்+=

ம்+=

ன்+=

,,,,, : அகர மெல்லினக் குறில்கள் 6


ங்+=ஙி

ஞ்+=ஞி

ண்+=ணி

ந்+=நி

ம்+=மி

ன்+=னி

ஙி,ஞி,ணி,நி,மி,னி : இகர மெல்லினக் குறில்கள் 6


ங்+=ஙு

ஞ்+=ஞு

ண்+=ணு

ந்+=நு

ம்+=மு

ன்+=னு

ஙு,ஞு,ணு,நு,மு,னு : உகர மெல்லினக் குறில்கள் 6


ங்+=ஙெ

ஞ்+=ஞெ

ண்+=ணெ

ந்+=நெ

ம்+=மெ

ன்+=னெ

ஙெ,ஞெ,ணெ,நெ,மெ,னெ : எகர மெல்லினக் குறில்கள் 6


ங்+=ஙொ

ஞ்+=ஞொ

ண்+=ணொ

ந்+=நொ

ம்+=மொ

ன்+=னொ

ஙொ,ஞொ,ணொ,நொ,மொ,னொ : ஒகர மெல்லினக் குறில்கள் 6


(1):1:3:2() உயிர்மெய் மெல்லின நெடில்கள்:

ங்+=ஙா

ஞ்+=ஞா

ண்+=ணா

ந்+=நா

ம்+=மா

ன்+=னா

ஙா,ஞா,ணா,நா,மா,னா : ஆகார மெல்லின நெடில்கள் 6


ங்+=ஙீ

ஞ்+=ஞீ

ண்+=ணீ

ந்+=நீ

ம்+=மீ

ன்+=னீ

ஙீ,ஞீ,ணீ,நீ,மீ,னீ : ஈகார மெல்லின நெடில்கள் 6


ங்+=ஙூ

ஞ்+=ஞூ

ண்+=ணூ

ந்+=

ம்+=மூ

ன்+=னூ

ஙூ,ஞூ,ணூ,நூ,மூ,னூ : ஊகார மெல்லின நெடில்கள் 6


ங்+=ஙே

ஞ்+=ஞே

ண்+=ணே

ந்+=நே

ம்+=மே

ன்+=னே

ஙே,ஞே,ணே,நே,மே,னே : ஏகார மெல்லின நெடில்கள் 6


ங்+=ஙோ

ஞ்+=ஞோ

ண்+=ணோ

ந்+=நோ

ம்+=மோ

ன்+=னோ

ஙோ,ஞோ,ணோ,நோ,மோ,னோ : ஓகார மெல்லின நெடில்கள் 6


(1):1:3:2() உயிர்மெய் மெல்லினக் குறுக்கம்:

ங்+=ஙை

ஞ்+=ஞை

ண்+=ணை

ந்+=நை

ம்+=மை

ன்+=னை

ஙை,ஞை,ணை,நை,மை,னை : ஐகார மெல்லினக் குறுக்கம் 6


ங்+=ஙௌ

ஞ்+=ஞௌ

ண்+=ணௌ

ந்+=நௌ

ம்+=மௌ

ன்+=னௌ

ஙௌ,ஞௌ,ணௌ,நௌ,மௌ,னௌ : ஔகார மெல்லினக் குறுக்கம் 6


குறிப்பு
: மௌரியர் என்ற சொல் ஔகாரத்தைச் சேர்ந்தது. எனவே, அதை "மெ ரி ர்" என்று படிக்காமல் "மவ்ரியர்" என்பதுபோல் படிக்க வேண்டும்.

(1):1:3:3() உயிர்மெய் இடையினக் குறில்கள்:

ய்+=

ர்+=

ல்+=

வ்+=

ழ்+=

ள்+=

,,,,, : அகர இடையினக் குறில்கள் 6


ய்+=யி

ர்+=ரி

ல்+=லி

வ்+=வி

ழ்+=ழி

ள்+=ளி

யி,ரி,லி,வி,ழி.ளி : இகர இடையினக் குறில்கள் 6


ய்+=யு

ர்+=ரு

ல்+=லு

வ்+=வு

ழ்+=ழு

ள்+=ளு

யு,ரு,லு,வு,ழு,ளு : உகர இடையினக் குறில்கள் 6


ய்+=யெ

ர்+=ரெ

ல்+=லெ

வ்+=வெ

ழ்+=ழெ

ள்+=ளெ

யெ,ரெ,லெ,வெ,ழெ,ளெ : எகர இடையினக் குறில்கள் 6


ய்+=யொ

ர்+=ரொ

ல்+=லொ

வ்+=வொ

ழ்+=ழொ

ள்+=ளொ

யொ,ரொ,லொ,வொ,ழொ,ளொ : ஒகர இடையினக் குறில்கள் 6


(1):1:3:3() உயிர்மெய் இடையின நெடில்கள்:

ய்+=யா

ர்+=ரா

ல்+=லா

வ்+=வா

ழ்+=ழா

ள்+=ளா

யா,ரா,லா,வா,ழா,ளா : ஆகார இடையின நெடில்கள் 6


ய்+=யீ

ர்+=ரீ

ல்+=லீ

வ்+=வீ

ழ்+=ழீ

ள்+=ளீ

யீ,ரீ,லீ,வீ,ழீ,ளீ : ஈகார இடையின நெடில்கள் 6


ய்+=யூ

ர்+=ரூ

ல்+=லூ

வ்+=வூ

ழ்+=ழூ

ள்+=ளூ

யூ,ரூ,லூ,வூ,ழூ,ளூ : ஊகார இடையின நெடில்கள் 6


ய்+=யே

ர்+=ரே

ல்+=லே

வ்+=வே

ழ்+=ழே

ள்+=ளே

யே,ரே,லே,வே,ழே,ளே : ஏகார இடையின நெடில்கள் 6


ய்+=யோ

ர்+=ரோ

ல்+=லோ

வ்+=வோ

ழ்+=ழோ

ள்+=ளோ

யோ,ரோ,லோ,வோ,ழோ,ளோ : ஓகார இடையின நெடில்கள் 6


(1):1:3:3() உயிர்மெய் இடையினக் குறுக்கம்:

ய்+=யை

ர்+=ரை

ல்+=லை

வ்+=வை

ழ்+=ழை

ள்+=ளை

யை,ரை,லை,வை,ழை,ளை : ஐகார இடையினக் குறுக்கம் 6


ய்+=யௌ

ர்+=ரௌ

ல்+=லௌ

வ்+=வௌ

ழ்+=ழௌ

ள்+=ளௌ

யௌ,ரௌ,லௌ,வௌ,ழௌ,ளௌ : ஔகார இடையினக் குறுக்கம் 6


குறிப்பு:
யௌவனம் என்பது ஔகாரம் சேர்ந்த (வடமொழிச்) சொல்லாகும். அதை, "யெ ம்" என்று படிக்காமல் "யவ்வனம்" என்பதுபோல் படிக்க வேண்டும். வௌவால் எனும் தழிச்சொல்லை, "வவ்வால்" என்பது போல் படிக்க வேண்டும்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

Monday, July 20, 2009

பழகு மொழி - 03

(1):1:2 மெய்யெழுத்துகள்

'புள்ளி எழுத்து' என்று வழக்கிலும் 'ஒற்று' என்று இலக்கியத்திலும் குறிப்பிடப் படுபவை மெய்யெழுத்துகளாகும். மெய்யெழுத்தின் மாத்திரை அரையாகும். மெய்யெழுத்து இனங்கள் மூவகைப் படும்:


(1):1:2:1 வல்லினம்

க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஆறும் வன்மையுடன் ஒலிப்பதால் வல்லினம் என்றானது.

(1):1:2:2 மெல்லினம்

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகிய ஆறும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லினம் என்றானது.

(1):1:2:3 இடையினம்

ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகிய ஆறும் வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்டு ஒலிப்பதால் இடையினம் என்றானது.

குறிப்பு: ா என்று நாம் எழுதும் துணையெழுத்து/துணைக்கால், ஓர் ஒற்றை(புள்ளியை)த் தாங்காது. ர் என்று எழுதுவது பிழையாகும்; உயிர் மெய்யெழுத்துக்கு மட்டுமே ஒற்றை/புள்ளியைத் தாங்கும் வலுவுண்டு.

எனவே, 'ர'வுக்கு மேல் புள்ளியிட்டு,irஎன்று எழுத வேண்டும்.

தற்போது நம் பயன்பாட்டில் உள்ள யுனிகோடு எழுத்துருவில் இவ்வசதி இல்லையென்பதால் நாம் அதன் வழியிலே தொடர்ந்து செல்வோம். யுனிகோடில் திருத்தம் வரக்கூடும்.


வாசகர்களுக்காகக் கடந்த வாரம் வினவப் பட்ட வினா:

"மழை நீர் உயிர் நீர்; மழை நீரை சேமிப்போம்" என்ற விளம்பரத்தில் உள்ள பிழை என்ன? காரணத்துடன் விளக்குக!


கடந்த வார வினாவுக்கான விடை:

'நீரை' எனும் சொல், 'நீர்' எனும் சொல்லோடு 'ஐ' எனும் இரண்டாம் வேற்றுமை இணந்த சொல்லாகும் (நீர்+ஐ=நீரை).

இரண்டாம் வேற்றுமைச் சொல் இணைந்த (முன்மொழிச்) சொல்லை அடுத்து வரும் தமிழ்ச்சொல் (வருமொழி), (க்+உயிர், ச்+உயிர், த்+உயிர், ப்+உயிர் ஆகிய வல்லினத்தில் தொடங்கினால் முன்மொழியில், வருமொழியின் முதல் எழுத்தின் உயிர் மெய் (புள்ளி/ஒற்று) எழுத்து ஒன்று புதிதாக உருவாகி, முன்மொழியின் இறுதியில் இணைந்து கொள்ளும். இதை வலி மிகுதல் எனக் கூறுவர். பிற்பாடு வரவிருக்கின்ற வேற்றுமைப் பாடத்தில் அவற்றை விரிவாகப் பழகவிருக்கிறோம்.

எனவே, "நீரை சேமிப்போம்" என்று பிழையாக எழுதாமல் நீரைச் சேமிப்போம் என எழுதப் பழகுவோம்.

வாசகர்களுக்கான இவ்வாரக் கேள்வி:

சென்னை ப்ராட்வேயில் மாநகராட்சி நிர்வகிக்கும் ஒரு பூங்கா "ஸ்ரீராமுலு பூங்கா" ஆகும். அதில் ஓர் அறிவிப்பு:
"எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யப் பட்டு இந்த பூங்காவில் பயன்படுத்தப் படுகிறது"

மேற்காணும் அறிவிப்பில் உள்ள பிழை யாது?

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

Monday, July 13, 2009

பழகு மொழி - 02

(1):1:1 உயிரெழுத்துகளும் அவற்றின் தனித் தன்மைகளும்

உயிரெழுத்துகளை நான்கு வகைப் படுத்துவர்:

  1. குற்றெழுத்து(குறில்),
  2. நெட்டெழுத்து(நெடில்),
  3. சுட்டெழுத்து,
  4. வினாவெழுத்து.

(1):1:1:1 குற்றெழுத்து அல்லது குறில். இதன் ஒலி, ஒரு மாத்திரை கால அளவு குறுகி ஒலிப்பதால் குறில் என்றானது:

,,,, = 5 எழுத்துகள்.

ஒரு மாத்திரை கால அளவு என்பது கண் சிமிட்டும் நேரம் அல்லது கைவிரல் சொடுக்கும் நேரம் என்பர். ஒரு மாத்திரைக்கும் குறைவான கால அளவில் கண்களை மூடித் திறந்து விடலாம். அதற்காகவே, "இயல்பெழு மாந்தர் இமை நொடி மாத்திரை" என்றது நன்னூல். அஃதாவது மனிதன் இயல்பாகக் கண்களை மூடித் திறக்கும் நேரம் ஒரு மாத்திரையாம். அதுபோல், "உன்னல் காலே; ஊன்றல் அரையே; முறுக்கல் முக்கால்; விடுத்தல் ஒன்றே" எனும் சூத்திரப்படி, கட்டை விரலையும் நடுவிரலையும் சேர்க்க நினைப்பது (உன்னல்) கால் மாத்திரையாம். அவ்விரு விரல்களையும் இணைப்பது (ஊன்றுதல்) அரை மாத்திரையாம். சொடுக்குவதற்காக முறுக்குவது முக்கால் மாத்திரையாம். முறுக்கியதை விடுவது ஒரு மாத்திரையாம்.

(1):1:1:2()நெட்டெழுத்து அல்லது நெடில். இதன் ஒலி இரு மாத்திரை அளவு முழுமையாக நீண்டு ஒலிப்பதால் நெடில் என்றானது:

,,,, = 5 எழுத்துகள்.

குறிப்பு: ,ஓ ஆகிய இரண்டு எழுத்துகளும் ஒரு சொல்லின் இறுதியில் அமைந்து வினாவெழுத்தாக மாறும். "ஆ" என்பது ஓரெழுத்து ஒரு மொழி/சொல் ஆகும். "ஆ" என்றால் பசு (ஆவின் பால்).

(1):1:1:2()குறுக்கம். இதன் ஒலி ஒன்றரை மாத்திரை அளவே ஒலிப்பதால் இது குறுக்கமென்றாலும் தொல்காப்பியத்தில் நெடிலுடன் சேர்த்தே கணக்கிடப் படுகிறது: ", , , , , , ஔ என்னும் அப்பால் ஏழும் ஈரளபிசைக்கும் நெட்டெழுத்தென்ப". ஆனால், உண்மையில் ஐ,ஔ ஆகிய இரண்டும் குறுக்கமே. "மூன்று உயிர்அளபு, இரண்டா நெடில், ஒன்றே குறிலோடு '' ''க் குறுக்கம் ஒற்றளபு....." -நன்னூல். நமது பாடங்களில் இவ்விரண்டையும் குறுநெடில்/குறுக்கம் என்றே குறிப்போம்.

, = 2 எழுத்துகள்.

குறிப்பு: ஐ என்பது இரண்டாம் வேற்றுமைக்குரிய எழுத்தாகும். (அவன்+ = அவனை). ஐ எனும் எழுத்து, தனித்து ஒலிக்கும்போது இரண்டு மாத்திரை; ஒரு சொல்லின் தொடக்கத்தில் ஒன்றரை மாத்திரை; நடுவில்/இறுதியில் ஒரு மாத்திரை அளவுகளாக மூன்று வகைகளில் மாறி ஒலிக்கும். "தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம் நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்" -நன்னூல்.

காட்டுகள்: தனித்த = இரண்டு மாத்திரை

சொல்லின் முதலில்: யம் = ஒன்றரை மாத்திரை

சொல்லின் நடுவில்: அலையோசை = ஒரு மாத்திரை

சொல்லின் இறுதியில்: மலை = ஒரு மாத்திரை

(1):1:1:3 சுட்டெழுத்து. சொல்லின் முதலெழுத்தாக அமைந்து, ஒன்றைச் சுட்டிக் காட்டும் ஓரெழுத்து, சுட்டெழுத்தாகும்.

,, = 3 எழுத்துகள்

காட்டுகள்: +சொல்=அச்சொல்; +பாடம்=இப்பாடம்; +பக்கம்=உப்பக்கம்.

'உப்பக்கம்' என்பது இப்போது வழக்கில் இல்லாத சொல்லாகும். 'பின்பக்கம்' என்பது அதன் பொருளாகும்.

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்" என்று குறள் (620) கூறுகிறது. அதன் பொருள், தளராத முயற்சியை உடையோர் விதியையும் (உப்பக்கம்=)புறமுதுகிடச் செய்வர்" என்பதாகும்.

(1):1:1:4 வினாவெழுத்து. ஒரு சொல்லின் இறுதி எழுத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு வினாவை எழுப்புவது வினாவெழுத்தாகும்.

, = 2 எழுத்துகள்

காட்டுகள்: வருவான்+ = வருவானா?

வருகின்றான்+ = வருகின்றானா?

வந்தான்+ = வந்தானா?

தருவான்+ = தருவானோ?

மாட்டான்+ = மாட்டானோ?

*********************************

கடந்த வாரச் சொற்றொடர் பற்றிய விளக்கம்:

'என்ற', 'எனும்' ஆகிய சொற்களை முறையே இறந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் பயன் படுத்த வேண்டும்.

பிழையான சொற்றொடர்: "தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்".

"தஞ்சாவூர் என்ற ஊர்" என்று எழுதினால் அவ்வூர் இப்போது இல்லை என்றாகும். அதுபோலவே, "அருண்மொழி எனும்" என்று எழுதினால் அவன் இப்போது உயிருடன் இருக்கிறான் என்றாகும்.

சரியான சொற்றொடர்: "தஞ்சாவூர் எனும் ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி என்ற இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்".

இக்கட்டுரையைத் தொடர்ந்து கருத்தூன்றிப் படித்து வந்தால் சரியான, சிறந்த சொற்றொடர்களை எழுத முடியும்.

வாசகர்களுக்கான இவ்வாரக் கேள்வி:

"மழை நீர் உயிர் நீர்; மழை நீரை சேமிப்போம்"என்ற விளம்பரத்தில் உள்ள பிழை என்ன? காரணத்துடன் விளக்குக!

உதவி : சரியான விடை தருவதற்கு இப்பாடத்தில் உதவி ஒளிந்திருக்கிறது.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

Tuesday, July 07, 2009

பழகு மொழி - 01

(1) எழுத்தியல்

நம் தாய்மொழியாம் தமிழின் பெருமைகள் குறித்து எழுதப் புகுந்தால் ஏராளம் எழுதலாம். அவற்றுள் தாய்த்தமிழைப் புகழ்ந்தேற்றி நம்மவர்கள் பாடிவைத்தவை மட்டுமின்றி, தமிழைக் காதலித்து வாழ்ந்து மறைந்த வெளிநாட்டுக் காரர்களும் அடங்குவர்.

தமிழில் தேம்பாவணி எனும் பெருங்காப்பியம் பாடிய வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தவர். தமிழில் பல நூல்களையும் இலக்கண விளக்கங்களையும் வழங்கியவர். இப்போது நாம் பயன் படுத்தும் ஏ,ஓ ஆகிய இரு தமிழ் எழுத்துகளும் கி.பி. 1720வரை எ,ஒ ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு அமைக்கப் பட்டிருந்தன. அவற்றை ஏ,ஓ என்று மாற்றியமைத்தப் பெருமை வீரமாமுனிவருக்குண்டு. தமிழ்மொழி வேற்றுநாட்டவரையும் எவ்வாறு ஈர்த்தது என்பதற்கு, "இங்குத் தமிழ் மாணவன் ஒருவன் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் குறிக்குமாறு கேட்டுக் கொண்டு உயிர் விட்ட டாக்டர் ஜி.யூ.போப் பாதிரியாரின் முறிச் சான்று ஒன்றே போதும்.

உலகின் வாழும் செம்மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியின் பேச்சுத் தொடக்கம் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் அது வரிவடிவம் பெற்றது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் கூறுவர்.

சிறந்த ஒரு மொழியின் அடிப்படை அதன் சொல்வளமாகும். சொல்லுக்கு அடிப்படை எழுத்துகளும் எழுத்துக்கு அடிப்படை ஒலியுமாகும். எழுத்துகளை அவற்றின் ஒலிகளுக்கேற்ப மூன்று இனங்களாகப் பிரித்துத் தன்னகத்தே கொண்டிலங்குவதை ஆராய்ந்து பார்த்தால் தமிழ்மொழியின் அறிவியல் புரியும்.

(1):1 எழுத்து வகைகள்

தமிழெழுத்து நான்கு வகைப்படும்:

(1):1:1 உயிரெழுத்து (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ) = 12

(1):1:2 மெய்யெழுத்து (க்,ச்,ட்,த்,ப்,ற்,ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) = 18

(1):1:3 உயிர் மெய்யெழுத்து (க்+அ=க, தொடங்கி ள்+ஔ=ளௌ வரை 12x18) = 216

(1):1:4 ஆய்த எழுத்து (ஃ) = 1


மொத்தம் 247 எழுத்துகள்.

"அட..... ஆனா ஆவன்னாக்குத்தான் இம்பூட்டு அலப்பறயா.....?" என்று தயை கூர்ந்து யாரும் கேட்டு விடாதீர்கள்.

தமிழ் வட்டெழுத்துகள் (வரிவடிவங்கள்) பற்றி நிறைய வேறுபட்ட கருத்துகள் உள்ளன. தமிழில் மொத்த உயிரெழுத்தே (அ,இ,உ,எ,ஒ) ஐந்துதான் எனும் வெடிக்கருத்தும் அதிலொன்று. எப்படி எனில், அ+அ=ஆ, இ+இ=ஈ, உ+உ=ஊ, எ+எ=ஏ, ஒ+ஒ=ஓ ஆக ஓரேயெழுத்து இரண்டு தடவை வந்தால் நெடிலாகி விடும் எனும் யுனிகோடு கணக்கோடு, அ+ய்=ஐ, அ+வ்=ஔ என்று வளைத்துக் கொண்டு வருவோரும் உண்டு. ஐ,ஔ ஆகிய இரண்டு எழுத்துகள் பண்டைய தமிழில் இல்லாமலிருந்து பின்னர் வந்து இணைந்தவை எனும் கருத்தும் உண்டு. ஏனெனில், கி.பி 3-6 நூற்றாண்டுகளைச் சேர்ந்த எந்தக் கல்வெட்டிலும் நடுகல்லிலும் ஐ,ஔ ஆகிய இரண்டு எழுத்துகளும் காணப் படவில்லை. மீக்கூறியவாறு ஏ,ஓ ஆகிய இரு எழுத்துகளும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டவை. அதுமட்டுமின்றி 'ஈ' என்பது எழுத்தன்று; அஃது ஓர் ஓவியம் எனும் கருத்தும் உண்டு. காரணம், ஒரு நெடிலின் வரிவடிவம் அதன் குறிலை ஒத்திருக்க வேண்டும். காட்டாக, 'ஆ' எனும் நெடிலின் வரிவடிவம் 'அ' எனும் குறிலை ஒத்திருக்கிறது. 'ஈ' எனும் நெடிலில் 'இ' எனும் குறிலை ஒத்த வடிவமே இல்லாமல் முற்றிலும் வேறாக உள்ளது.

இருப்பினும் தொல்காப்பியரின் கூற்றுப்படி,

அ இ உ
எ ஒ என்னும் அப் பால் ஐந்தும் ...
...
ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப் பால் ஏழும் ...

சேர்த்து 12உம் உயிரெழுத்துகள் என்றே நாம் கொள்வோம்.

எழுத்துகளோடு அவ்வப்போது கொஞ்சம் இலக்கணமும் பார்த்துக் கொள்ளலாம்:

"தஞ்சாவூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அருண்மொழி எனும் இராஜராஜ சோழ மன்னன் ஆட்சி புரிந்தான்" எனும் சொற்றொடரில் உள்ள பிழைகளை, தெரிந்தவர்கள் இங்குச் சுட்டிக் காட்டுங்கள்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

Sunday, July 05, 2009

பழகு மொழி - முன்னுரை

"ல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே - வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி எனத் தமிழ்க்குடியாகத் திகழ்வதற்குப் பெருமை கொண்டோம். ஆனால், கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்னர் மனிதன் தோன்றியிருப்பானா என்பதைச் சிந்திக்க மறந்தோம். ஏனெனில் தாய்மொழிப் பாசம் நமது அவ்வாறான சிந்தனையைத் தடுத்து விட்டது"


மேற்காண்பது, ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் "கல்வெட்டு முதல் கம்ப்யூட்டர்வரை - தமிழ் எழுத்துகளின் வரிவடிவ வளர்ச்சி" என்ற தலைப்பில் 'தமிழ் கம்ப்யூட்டர்' இதழுக்கு அடியேன் எழுதிய கட்டுரையின் தொடக்கம்.

மனிதனின் முதல் ஆயுதமான கல் தோன்றுவதற்கு முன்னரே வாள் தாங்கிய தமிழனைக் கற்பனை செய்து பார்ப்பதை மறந்து, கம்ப்யூட்டரில் - இணையத்தில் தமிழ் மொழியின் பரவலைப் பார்க்கும்போது பூரித்துப் போகிறோம்!

யுனிகோடு எனும் ஒருங்குறி அற்புதம் இணையத்தில் புரட்சியாகப் புகுந்தபின் தமிழும் கணினி அறிவும் தெரிந்த பலரும் எழுத வந்தனர் - இரண்டுமே கொஞ்சம் தெரிந்திருந்தால் போதும் என்ற துணிச்சலோடு.

ப்ளாகர் எனும் இலவச வலைப்பூ இணையத்தில் அறிமுகமான பின்னர் அறிவியல், ஆன்மீகம், அரசியல், விளையாட்டு, உலக நடப்புகள், போன்ற எல்லாத் துறைகளிலும் தத்தமக்கு உள்ள சொந்தக் கருத்துகளை, புலமையை இணையத்தில் வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் பகிர்ந்து ஓரளவு பலனடைந்து வருகிறோம்.

ஆனால், நாம் எழுதும் தமிழ் தரமானதா என்பதைக் குறித்துப் பெரும்பாலோர் கவலை கொள்வதே இல்லை. இணையத்தில் எழுதுபவர்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. ஏனெனில் பெரும்பாலான தமிழ் அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் தம் மொழித் திறன் குறித்துக் கிஞ்சிற்றும் கவலை கொள்வதில்லை.

"இரண்டு வாகனம் நேருக்கு நேர் மோதல்" என்று நாளிதழ்களில் படிக்கும்போதும் "இத்துடன் செய்திகள் முடிவடைந்தது" என்று தொலைக்காட்சியில் கேட்கும்போதும் பலவேளை மனதுக்குள் வருத்தமும் சிலவேளை முள் குத்தும் வலியும் தோன்றுகிறது!

அவற்றைத் திருத்தி முடிப்பது நம்மால் ஆகாது என்றாலும் இணையத்தில் எழுதுபவர்கள் பிழையின்றித் தமிழ் எழுத நாம் உதவலாம் என்ற எண்ணம் நீண்ட காலமாக எனக்கு இருந்து வந்தது. இங்கு எழுதத் தொடங்கியதற்கு அதுவே தலையாய காரணமன்று.

"அன்புள்ள ஆசிரியருக்கு," எழுதி அலுத்துப்போய் நீண்ட காலம் எழுத்தில் தொடர்பு இல்லாமல், இப்போது எழுதத் தொடங்கியதில் இலக்கண/எழுத்துப் பிழைகள் எனக்குக் கூடுதலாக வருகின்றன. தீட்டப் படாமல் உறையினுள் உறங்கும் வாள், கூர் மழுங்கிப் போய்விடுவது இயல்பன்றோ? அதுவும் ஒரு தமிழ்க்குடியின் வாள் ...!

இந்தத் தொடரின் உண்மையான நோக்கம் புரிந்திருக்குமே! ஆம்; தூர் வாரப்படாமல் கிடக்கும் எனது 'கிணற்றை'த் தூர்வாரும் முயற்சியில் ஒரு தொடர். அதற்குத் துணைபுரிந்து இடமளிக்கும் சத்தியமார்க்கம்.காம் தளத்தினருக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும். 'பழகு மொழி' எனும் தலைப்பில் தமிழைப் பிழையறக் கற்று எழுதுவதற்கான இக்கட்டுரையை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் தொடர்ந்து வெளியிட அத்தளத்தினர் அன்புடன் இசைந்துள்ளனர்.

கற்றுக் கொடுப்பதற்காகவே கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள. சுருங்கக் கூறின், 'தொட்டனைத்தூறும் மணற்கேணி ...' முயற்சியே இத்தொடர்.

அந்தக் குறளின் முழுமையையும் ஓர் அன்பர், "தொட்டனைத்தூறும் ம‌ண‌ற் கேணீ மாந்த‌ற்க்கு க‌ற்ற‌னைத் தூறும் அறிவு" என்று இணையத்தில் எழுதி வைத்திருக்கிறார். படிக்கும் நமக்கே வலிக்கிறது! எழுதியவன் படித்தால் என்னாகும்?

"யோவ்! எழுதுறப் படிச்சிட்டுப் போவியா, அத விட்டுட்டு எலக்கணம் எழுத்துப்பிழை எல்லாம் பார்க்கணுமாக்கும்?" என்று எரிச்சல் படும் தமிழ்க்குடி, ஆங்கிலத்தில் எவராவது பேசும்போதோ எழுதும்போதோ சிறுபிழை செய்தாலும் அறச்சீற்றம் கொண்டு விடுவார்; குறைந்தது எள்ளி நகையாடத் தவற மாட்டார்.

ஆங்கில எழுத்துகள் மொத்தம் எத்தனை? என்று கேட்டால் அடுத்த நொடியில் விடை சொல்லிவிடக் கூடிய நம்மில் எத்தனை பேர், "தமிழ் மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?" என்ற கேள்விக்குச் சட்டென விடை சொல்வோம்?

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ...

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

Sunday, November 20, 2005

முதன்மொழி

::சோதனை ஓட்டம்::


நீங்கள் வழிதவறிப் புகுந்திருந்தால் ... நல்வரவு, மீண்டும் வருக.

முதல் வரியைப் படித்து விட்டு விரைந்து விலகி விடுங்கள்.

நன்றி!